மதுரையில் நடைபெறும் பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மாநிலம் முழுவதும் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ள நிலையில், காவல்துறையினர் கடும் கெடுபிடித்து செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களை கொடுக்கக்கூடாது என தனியார் வாகன உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாநாட்டில் பங்கேற்கும் வாகனங்கள் உரிமம் பெற வேண்டும் என்று கூறி பெல்வேறு கெடுபிடிகள் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அரசுமீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.மதுரையில் வருகிற 22-ந் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநில விஜபிக்கள் கலந்துகொள்ள உள்ளதுடன், சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மதுரை பயணிக்க பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில், பல வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான முருக பக்தர்கள் வர தயாராகி வருகின்றனர். மேலும் பக்தர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயிலும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 5 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாநாடு நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்திய நிலையில், உயர்நீதிமன்றம் மதுரை காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக சாடியதுடன், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து மதுரை முருகன் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு முருகன் கண்காட்சியை காண தினசரி நூற்றுக்கணக்கானோர் மதுரையில் குவிந்து வருகின்றனர். மாதிரி அறுபடை வீடுகளை 22-ம்தேதி வரை பொதுமக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் காலை,மாலையில் இரு மணி நேரம் பூஜை செய்யவும், பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து அறுபடை முருகனை மனமுருகி தரிசித்தனர். இதையடுத்து இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், முருக பக்தர்கள் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சவர் முருகனை கண்டு தரிசித்தனர். பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இந்து முன்னணி ஈடுபட்டுள்ளது. இதனிடையே, அறுபடை திடலில் பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிவறை, மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.மாதிரி அறுபடை வீடுகளில் வழிபட வரும் பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் மற்றும் திருப்புகழ் பாடுகிறார்கள். முருக பக்தர்கள் மாநாடு 22-ம் தேதி பிற்பகல் 3 முதல் இரவு 8 மணி வரை நடக்கும். மாலை 6 மணிக்கு அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி மற்றும் திருப்புகழ் பாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.இந்த நிலையில், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை அடையாளம் காணும் பொருட்டு ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து வரும் வாகனத்திற்கும், தனித் தனி வண்ணங்களில் வாகன அனுமதி சீட்டு, அந்தந்த மாவட்ட, மாநகர போலீசார் மூலம் வழங்கப்பட உள்ளது. அதை வாகன அடையாள அட்டை இருந்தால்தான் வாகனம் அனுமதிக்கப்படும் என கூறி காவல்துறை கெடுபிடிகள் செய்யத்தொடங்கி உள்ளது.வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை அடையாளம் காணும் பொருட்டு ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து வரும் வாகனத்திற்கும், தனித்தனி வண்ணங்களில் வாகன அனுமதி சீட்டு, அந்தந்த மாவட்ட, மாநகர போலீசார் மூலம் வழங்கப்பட உள்ளது. முறையான ஆவணங்களை சமர்ப்பித்து உரிய வாகன அனுமதி சீட்டினை பெற்று கலந்து கொள்ளலாம்.வாகன அனுமதி சீட்டுகள் எங்கே கிடைக்கும்? அந்தந்த மாவட்ட/மாநகர காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் பெறலாம். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து 24 மணி நேரத்திற்குள் சீட்டை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.மாநாட்டில் பங்கேற்பவர்கள் அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் விண்ணப்பித்து, வாகன அனுமதி சீட்டை பெற வேண்டும்.தெற்கு மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு பச்சை நிற அனுமதி சீட்டும், வடக்கு மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஆவடி, தாம்பரம், சென்னையிலிருந்து வரும் வாகனங்களுக்கு வெள்ளை நிற அனுமதி சீட்டும் வழங்கப்பட உள்ளன.மத்திய மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சியில் இருந்து வரும் வாகனங்களுக்கு நீல நிற அனுமதி சீட்டும், மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, சேலம், திருப்பூரில் இருந்து வரும் வாகனங்களுக்கு மஞ்சள் நிற அனுமதி சீட்டும், பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு சிவப்பு நிற அனுமதி சீட்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் வாகனங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட வழியாகவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்து, மாநாடு முடிந்த பிறகு அதே வழியிலேயே திரும்பிச்செல்ல வேண்டும் என கூறியுள்ளது.தென் மாவட்டங்கள் (மதுரை, சிவகங்கை, நெல்லை, குமரி): திருமங்கலம், கப்பலூர், சிந்தாமணி சுங்கச்சாவடி, வேலம்மாள் மருத்துவமனை, விரகனூர் சந்திப்பு வழியாக வரவேண்டும்.மேற்கு மாவட்டங்கள் (கோவை, தேனி): சமயநல்லூர் பைபாஸ், புதுக்கோட்டை சந்திப்பு, கூத்தியார்குண்டு, வலையங்குளம் வழியாக வரவேண்டும்.வடக்கு மாவட்டங்கள் (சென்னை, ஆவடி): திருப்புவனம், மேலூர், நத்தம், பாண்டிகோவில் வழியாக வரவேண்டும்.ராமநாதபுரம் மாவட்டம்: பார்த்திபனூர், மானாமதுரை, சிலைமான், விரகனூர் சந்திப்பு வழியாக. சிவகங்கை மாவட்டம்: பூவந்தி, வரிச்சியூர், சிவகங்கை ரோடு சந்திப்பு வழியாக வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் மாநாடு நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படமாட்டாது. மாநாட்டுக்காக வந்த வாகனங்கள், திரும்பவும் அந்த வழித்தடங்களிலேயே மாநிலங்களுக்குத் திரும்ப வேண்டும். பாதுகாப்பு, ஒழுங்கு, மற்றும் வழிசெலுத்தலுக்காக காவல்துறையின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மதுரை முருக பக்தர்கள் மாநாடு – காவல்துறையினர் கடும் கெடுபிடி.. பொதுமக்கள் அதிருப்தி..
