கோவை, மே 29- போலீசில் கூறியதால் ஆத்திரம் அடைந்து சுமை தூக்கும் தொழிலாளியின் வாயில் சோப்பு பவுடர் திணித்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை வெள்ளலூர் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஹக்கீம் (50). சுமை தூக்கும் தொழில் செய்து வருகிறார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (35) என்பவரும் சுமை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் மது குடிப்பது வழக்கம். அதேபோல நேற்று முன்தினம் சந்தோஷ்குமார் மது குடிக்க ஹக்கீமை வீட்டின் அருகே அழைத்து சென்றார். அங்கு இருவரும் மது குடித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென சந்தோஷ்குமார் தான் வேறொருவருடன் தகராறில் ஈடுபட்டதை எதற்கு போலீசில் தெரிவித்தாய் என கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி ஹக்கீமிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த சோப்பு பவுடரை எடுத்து சைட் டிஷ் என குறி ஹக்கீமின் வாயில் திணித்தார். சிறிது நேரத்தில் அவருக்கு தொண்டை எரிச்சல் ஏற்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. இதை தொடர்ந்தது சந்தோஷ்குமார் அவரை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ஹக்கீம் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சந்தோஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசில் கூறியதால் ஆத்திரம் சுமை தூக்கும் தொழிலாளியின் வாயில் சோப்பு பவுடர் திணித்து மிரட்டல் வாலிபர் கைது.
