ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – 4 பேர் பலி..

ஸ்ரேல்-ஹமாஸ் போர் கடந்த 2023 அக்டோபரில் தொடங்கி இரண்டாம் ஆண்டை எட்டியுள்ளது. இந்த போரில், ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது.

இதற்கு பதிலடியாக, கடந்த ஆண்டு இஸ்ரேல் ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில், அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்பட பலர் உயிரிழந்தனர்.

அதன்பின் இரு தரப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், ஹிஸ்புல்லா மீண்டும் ஆயுதங்களைத் தயாரித்து தாக்குதல்களுக்கு முயற்சி செய்து வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. இதனைத் தடுக்க, அந்த அமைப்பின் ஆயுத கிடங்குகள் மீது இஸ்ரேல் இடைக்கிடையே தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள அரபு சலீம் என்ற இடத்தில் இஸ்ரேல் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் நால்வர் உயிரிழந்ததாகவும், ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுத கிடங்கை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.