சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறாரா கனிமொழி..?

மிழக தேர்தல் களம் பரபரப்பான சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் வாக்கு பதிவுகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மே நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்தி வருகிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை இறுதி செய்து வருகின்றனர். மறுபுறம் தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரி மற்றும் தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் போட்டியிட உள்ளனர். அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் மு க ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களையும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கி உள்ளார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தரப்பிலிருந்து 12 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் கீதாஜீவன், கயல்விழி உள்ளிட்ட ஆறு பேர் வெற்றி பெற்றார். இரண்டு பேருக்கு அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தது. குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஒரு கோடிக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ஆயிரம் உரிமை தொகை திட்டம், பெண்களுக்கு தங்கும் விடுதிகள் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர். தமிழகத்தில் பெண்களின் ஓட்டு தான் ஆண்களின் ஓட்டை விட அதிகம் என்பதால் அவர்களை கவரும் திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வந்தனர். மேலும் சமீபத்தில் மூன்று மாதங்களுக்கு சேர்த்து மகளிர் உரிமை தொகுதியாக 5000 ரூபாயும் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகை 2 ஆயிரம் ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்து உள்ளனர்.

தற்போது திமுக சார்பில் தூத்துக்குடி எம்பியாக இருந்து வருகிறார் கனிமொழி. முதல்வர் மு க ஸ்டாலின் சகோதரியாக இருந்தாலும் அவர் மாநில அரசியலில் பெரிதாக ஈடுபடுவதில்லை. இந்நிலையில் கனிமொழியின் ஆதரவாளர்கள் அவரை இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தி வருவதாக நீண்ட நாட்களாக செய்திகள் வெளியாகி வருகிறது. திமுக சார்பில் விருப்பமனு வழங்கப்பட்ட போது கனிமொழியின் பெயரில் ரூபாய் 25000 கட்டணம் செலுத்தி 30 பேர் விருப்பமனுக்களை அளித்துள்ளனர். திருச்செந்தூர், பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி, மயிலாப்பூர், திருவெற்றியூர், ராயபுரம், திருவாரூர், தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகளில் கனிமொழி போட்டியிட அவரது பெயரில் விருப்பம் மனுவை தொண்டர்கள் அளித்துள்ளனர்,

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கனிமொழி தரப்பில் கேட்டபோது, அவர்கள் இடத்தில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. இந்நிலையில் திமுக, விருப்ப மனு அளித்தவர்களிடம் விரைவில் நேர்காணல் நடத்த உள்ளதால், கனிமொழியும் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

சட்டசபை தேர்தலில் யாருக்கு எந்த தொகுதி, யார் வேட்பாளர் என அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். கட்சியில் உள்ள இவரை பிடித்தால் சீட்டு வாங்கலாம், அவரைப் பிடித்தால் சீட்டு வாங்கலாம் என எண்ணி நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்களுடைய உழைப்பை தொகுதியில் காட்டுங்கள். மக்களுக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமே இந்த முறை திமுகவில் சீட்டு வழங்கப்படும். வெற்றி பெற வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சீட் உறுதி. அனைத்து வேட்பாளர்கள் பற்றிய விவரங்களையும் சேகரித்து வருகிறேன், அனைத்தும் என் டேபிளில் இருக்கும். இந்த முறை 234 தொகுதிகளிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர். கட்சியின் வெற்றக்கு உழைப்பவர்களுக்கு தான் தேர்தலுக்குப் பின் பரிசு தேடி வரும் என்றும் பேசியுள்ளார்.