மாநிலங்களவை எம்பியாகிறாரா அண்ணாமலை..?

டந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பு ஏற்று பணியாற்றி வந்த அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க.வினர் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவே தலைமை கருதியது.

ஆனால், இவர் மீது அதிருப்தியில் இருந்த அ.தி.மு.க.வினர் கூட்டணி தொடர வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் பா.ஜ.க. தலைமைக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

இதற்கிடையே சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அ.தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதி செய்ததுடன், பா.ஜ.க.வின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். அமித்ஷா தெரிவித்த மறுநாளே பா.ஜ.க. மாநில புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, பா.ஜ.க. யுவமோர்ச்சா பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு அண்ணாமலை தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜ.க. மத்திய தலைமை பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், தீவிர ஆலோசனைக்குப் பிறகே தெளிவான முடிவு எடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.