டிரம்பிற்கு மெசேஜ் அனுப்பிய ஈரான்;அமெரிக்கா மாதிரி இல்லை!10,000 வீரர்கள் உள்ள இடத்தை தாக்கியது

டெஹ்ரான்: ஈரான் கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இரண்டு தூதரக வழிகள் மூலம் அமெரிக்காவிற்கு தகவல் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.அமெரிக்க அதிபரிடம் தெரிவித்த பின்பே.. ஈரான் இந்த அட்டாக்கை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.ஈரான் கத்தாரில் உள்ள அல் உடீத் விமானத் தளத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் situation அறையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் நிலைமையை கண்காணித்து வருகிறார். அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து கத்தாரில் உள்ள தளங்கள் மீது 6 ஏவுகணைகளை ஏவியது என்று ஏ.எஃப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.ஜூன் 23, 2025 அன்று, ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது சற்று முன் ஏவுகணைகளை ஏவியது. ஆபரேஷன் பெஷாரத் ஃபதா என்று பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.கத்தாரில் உள்ள அல் உடீத் விமானத் தளத்தின் மீதான தாக்குதல்தான் இதில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தோஹாவுக்கு வெளியே அமைந்துள்ள அல் உடீத் விமானத் தளத்தில் அமெரிக்கா சுமார் 10,000 துருப்புக்களை நிலைநிறுத்தியுள்ளது. இது மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ நிறுவலாகும், மேலும் இப்பிராந்தியத்தில் முக்கிய மையமாக விளங்குகிறது. இங்குதான் ஈரான் தாக்கி உள்ளது.ஏவுகணைகள் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ராய்ட்டர்ஸ் மற்றும் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. அமெரிக்க விமானத் தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்துவிட்டதாக கத்தார் கூறியதுடன், ஈரானின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது. முன்னதாக கத்தார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியது. “பாதுகாப்பு அச்சுறுத்தல்” காரணமாக தங்கள் குடிமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரகங்கள் அறிவுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த திடீர் எச்சரிக்கைகளால் தோஹா முழுவதும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள் என பல நிறுவனங்கள் ஊழியர்களையும் மாணவர்களையும் மறு அறிவிப்பு வரும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தின. ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்திய அதே எண்ணிக்கையிலான குண்டுகளை திருப்பித் தாக்குதலில் பயன்படுத்தியதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. அதாவது அமெரிக்கா 6 குண்டுகளை பயன்படுத்தியது.. அதேபோல் ஈரான் 6 குண்டுகளை பயன்படுத்தி பதில் அளித்துள்ளது.இதற்கிடையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெகசெத் மற்றும் கூட்டுத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் ஆகியோருடன் வெள்ளை மாளிகையின் situation அறையில் நிலைமையைக் கண்காணித்து வருகிறார். ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்தித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.