சிந்து நீர் பாகிஸ்தானுக்கு இல்லை.. பஞ்சாபிற்கும் அனுப்ப முடியாது.. காஷ்மீர் முதல்வர் ஆவேசம்

ம்மு: இந்தியா பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நீரைப் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பும் வகையில் கால்வாய் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.ஆனால், இதற்குக் காஷ்மீர் அரசே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாகவே சிந்து நதி நீர் ஒப்பந்தம் இருந்து வந்தது. ஆனால், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இந்தியா அறிவித்துவிட்டது. இது இந்தியாவின் மிக முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. இதுநாள் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் அமலில் இருந்ததால் சிந்து நதிகளில் இந்தியாவால் எந்தவொரு கட்டுமானமும் மேற்கொள்ள முடியாமல் இருந்தது.இப்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தனது தேவைகளை நிறைவேற்றக் கால்வாய்களை அமைக்கலாம். இந்தச் சூழலில் தான் ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குத் தேவையான நீரைப் பெறச் சிந்து நதிகளில் உள்ள உபரி நீரைத் திருப்பி விடுவதற்காக இந்தியா ஒரு கால்வாய் அமைத்து வருவதாகச் சமீபத்தில் வெளியான தகவல் வெளியானது. இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இதைக் காட்டமாக விமர்சித்துள்ளார்.இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, “நாங்கள் ஏன் பஞ்சாபிற்குத் தண்ணீர் தர வேண்டும்? ஜம்முவிலேயே ஏற்கனவே வறட்சி நிலவுகிறது. எனவே, இங்கிருந்து நீர் செல்வதை நிச்சயம் அனுமதிக்க மாட்டேன். முதலில் இங்குள்ள வறட்சியை நாங்கள் தீர்க்க வேண்டும். நான் ஏன் பஞ்சாபிற்கு நீர் அனுப்ப ஒப்புக் கொள்ள வேண்டும்? சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின் கீழ் பஞ்சாபிற்கு ஏற்கனவே தண்ணீர் செல்கிறது. எங்களுக்குத் தேவைப்பட்ட போது அவர்கள் எப்போதாவது தண்ணீர் கொடுத்திருக்கிறார்களா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் பகுதியில் ஷாபூர் கண்டி அணைக் கட்டும் விவகாரத்தில் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசுகளுக்கு இடையே 45 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சினையை உமர் அப்துல்லா சுட்டிக்காட்டினார். 1979ஆம் ஆண்டு இரு மாநிலங்களுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், மத்திய அரசின் தலையீட்டிற்குப் பிறகு 2018ஆம் ஆண்டுதான் இந்த ஒப்பந்தம் நிறைவேறியது. இந்த அணை ரவி நதியிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீரைத் தடுப்பதற்காகக் கட்டப்பட்டது.இது குறித்து உமர் அப்துல்லா கூறுகையில், “அந்த அணை இல்லாமல் எவ்வளவு சிக்கல்.. எத்தனை வருடங்கள் அவர்கள் எங்களைக் கண்ணீர்விட வைத்தனர். இப்போது இந்த நீர் எங்களுக்குத்தான். முதலில் நாங்கள் தண்ணீரைப் பயன்படுத்துவோம். அதன் பிறகு மற்றவர்களைத் தருவது பற்றி யோசிப்போம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீரைப் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய வட மாநிலங்கள் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. இந்த முடிவைச் செயல்படுத்துவதற்காக ஜல் சக்தி அமைச்சகம் போர்க்கால அடிப்படையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியானது. பாகிஸ்தானுக்குச் செல்லும் ஒரு சொட்டு நீர் கூட வீணாகக் கூடாது என்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், பஞ்சாபிற்கு நீர் வழங்க இப்போது ஜம்முவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.