நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா 4 -வது இடத்தை பிடிக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சர்வதேச பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (நாமினல் ஜிடிபி) 2025-ம் ஆண்டில் அதாவது நடப்பு 2025-26-ம் நிதியாண்டில் 4,187.017 பில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவான 4,186.431 பில்லியன் டாலரை விட சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, 2024 வரையில் சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5- வது இடத்தில் இருந்து வந்த நிலையில், நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானை விஞ்சி இந்தியா 4-வது இடத்துக்கு முன்னேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, வரும் 2028-ம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சியில் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளிவிட்டு மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, ஜெர்மனியின் பொருளாதாரம் 5,251.928 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில் இந்தியாவின் ஜிடிபி அதனை விஞ்சி 5,584.476 பில்லியன் டாலாராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை கொண்ட நாடாக வரும் 2027-ம் ஆண்டில் உருவெடுக்கும். அப்போது இந்தியாவின் ஜிடிபி 5,069.47 பில்லியன் டாலராக இருக்கும்.
மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியலில் நடப்பாண்டில் எப்போதும்போல் முதல் இரண்டு இடங்களை அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவையே தக்கவைக்கும். அவர்கள் இந்த தரவரிசையை இந்த தசாப்தம் முழுவதும் தக்கவைத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஐஎம்எப் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.