போபால்: வாகனப் பரிசோதனையின்போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை போலீஸார் சுருட்டியது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த புதன்கிழமை இரவு சப்-டிவிஷனல் போலீஸ் ஆபீஸர் (எஸ்டிஓபி) பூஜா பாண்டே தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் ரூ.3 கோடி ஹவாலா பணம் சிக்கியது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்வதற்குப் பதிலாக, காரை ஓட்டி வந்த சோஹன் பார்மர் என்ற ஹவாலா டீலரிடம் பணத்தைப் பாதியாக பாதியாக பிரித்துக் கொள்ளலாம் என பேசியுள்ளனர். மேலும் பணத்தை வழிப்பறி செய்துவிட்டதாக போலீஸில் புகார் கொடுக்குமாறும் அவரிடம் போலீஸார் கூறியுள்ளார்.
மறுநாள் காலை பந்தோல் போலீஸ் நிலையத்துக்கு வந்த ஹவாலா டீலர் சோஹன் பார்மர் தனது பணம் பறிபோய்விட்டதாக புகார் தெரிவித்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த சப்-டிவிஷனல் போலீஸ் ஆபீஸர் (எஸ்டிஓபி) பூஜா பாண்டே, சோஹன் பார்மரிடம் பையில் ரூ.1.45 கோடி பணம் இருப்பதாகவும், மீதமுள்ள ரூ.1.5 கோடியை நாங்கள் பிரித்துக் கொள்கிறோம் என்று பேசியுள்ளனர். சோஹன் பார்மர் அந்தப் பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ.25.6 லட்சம் குறைந்திருந்தது. அந்தப் பணத்தையும் போலீஸாரே அபகரித்துள்ளனர்.
இதுகுறித்த தகவல் கசிந்ததால், ஜபல்பூர் போலீஸ் டிஐஜி, ஐஜி பிரமோத் வர்மா ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஹவாலா பணத்தை போலீஸார், கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து எஸ்டிஓபி பாண்டே, டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்பித் பைராம் உள்ளிட்ட 11 பேரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 11 பேர் மீதும் லக்னவாடா போலீஸ் நிலையத்தில் பணம் வழிப்பறி, கிரிமினல் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண் போலீஸ் அதிகாரி பூஜா பாண்டே, டவுன் போலீஸ் எஸ்ஐ அர்பித் பைராம், கான்ஸ்டபிள் ஜக்தீஷ் ஆகியோர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.