மரணத்தின் வலியையும்… மக்களின் அழுகுரலையும் கேட்டு அதை கடந்து செல்ல வழியின்றி தவிக்கிறேன்- மனமுடைந்து பேசிய ஆதவ் அர்ஜுனா..!!

ரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல உயிரிழப்புகள் ஏற்படுத்திய துயர சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுவரை பெரும்பாலும் மௌனமாக இருந்த ஆதவ் அர்ஜுனா, இதுதொடர்பாக தனது உருக்கமான கருத்துகளை பதிவு செய்துள்ளார். “மரணத்தின் வலியையும், மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவிக்கிறேன். 5 வயதில் என் தாயாரின் தற்கொலை பார்த்த போது அடைந்த அந்த வேதனையே, இப்போது இந்த மரணங்கள் மீண்டும் எனக்குள் தூண்டியுள்ளன” என அவர் தெரிவித்தார்.

மேலும், தனது சமூக ஊடகப் பதிவில், என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்… இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன்.

ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள். இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள்.

அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை. இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன்.

துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!'” என ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார். அவரது உணர்ச்சிபூர்வமான இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் பெரும் பரவலை ஏற்படுத்தியுள்ளது.