தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நான்கு நிதித்துறை சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
மார்ச் 14 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 18 மசோதாக்களில் இந்த நான்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் 14 முதல் ஏப்ரல் 30 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், பட்ஜெட் மீதான விவாதம், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மற்றும் 18 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டன. இவற்றில், நிதித்துறை தொடர்பான நான்கு மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலைப் பெற்றுள்ளன.
நிதித்துறை சார்ந்த இந்த நான்கு மசோதாக்கள், நிதி ஒதுக்கீடு தொடர்பான சட்ட முன்வடிவுகளாகும். இவை மாநிலத்தின் நிதி மேலாண்மை மற்றும் செலவினங்களை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது, தமிழக அரசின் நிதி நிர்வாகத்திற்கு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
மொத்தம் 18 மசோதாக்களில், மீதமுள்ள 14 மசோதாக்கள் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளன. இவற்றில், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவும் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சரே நேரடியாக துணை வேந்தராக இருப்பதற்கான ஷரத்துக்கள் இதில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாக்களுக்கும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.