கோவை ஜூன் 16 கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் பிரபு .இவர் உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் சற்குணம் என்பவருக்கும் ரேணுகா என்பவருக்கும் இடையே செல்வபுரத்தில் உள்ள நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் ரேணுகா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த நிலத்தை டாக்டர் ஒருவருக்கு விற்பனை செய்து விட்டதாக தெரிகிறது. எனவே அந்த டாக்டர் தான் வாங்கிய நிலத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பொக்லைன் எந்திரத்துடன் நேற்று அந்த நிலத்துக்கு சென்றார். அப்போது சற்குணம் , சப் இன்ஸ்பெக்டர் பிரபு உட்பட 5 பேர் அங்கு வந்தனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை யடுத்து சற்குணம்,சப் இன்ஸ்பெக்டர் பிரபு உட்பட 5 பேரும் செல்வபுரம் பேரூர் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும்செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் பிரபு,சற்குணம் உட்பட 5 பேரை கைது செய்தனர் .அவர்கள் அனைவரும் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர் .இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் சட்டவிரோதமாக சாலை மறியலில் ஈடுபட்டு இருப்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
கோவையில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கைது.
