சிலிண்டர் புக் பண்ணியும் டெலிவரி வரலையா..? உடனே இந்த நம்பருக்கு கூப்பிடுங்க!

ரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் எதிரொலியாக, இந்தியாவிலும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் கடும் தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ளது. இந்த விநியோகத் தடையால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் சிறு தொழில்கள் ஸ்தம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.எனினும், தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 20 நாட்களுக்குத் தேவையான வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் போதிய அளவில் கையிருப்பில் இருப்பதாக மாநில அரசு பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது. இதன் கீழ், வணிக மற்றும் தொழில்முறை பயன்பாட்டைக் காட்டிலும் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இதற்கிடையே, மக்களும் எங்கே வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் பலரும் அவசர அவசரமாக சிலிண்டருக்கு புக்கிங் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.ஆனால், சமையல் கேஸ் தட்டுப்பாடு குறித்துப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்றும், மக்கள் தேவையின்றிப் பதற்றமடைந்து சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சந்தையில் நிலவும் தற்காலிகச் சூழலைப் பயன்படுத்தி சிலர் சிலிண்டர்களைப் பதுக்குவதைத் தவிர்க்க, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் படி பதுக்கலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு ஆசியாவில் அரசியல் பதட்டங்கள் இருந்தாலும், எல்பிஜி விநியோகம் தடையின்றி உள்ளது என்று அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். நிலைமையை சமாளிக்க, வழக்கத்தை விட 30% எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பயப்பட தேவையில்லை என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அதிகாரிகள், சுத்திகரிப்பு நிலையங்கள் 100% திறனில் இயங்கி வருகிறது என்று விளக்கமளித்துள்ளனர்.இதற்கிடையே வீட்டு சிலிண்டர் ஒன்று வாங்கிய பின் அடுத்த சிலிண்டரைப் பதிவு செய்யும் கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.அதாவது நகர்ப்புறங்களில் இதற்கு முன்பு சிலிண்டர் புக்கிங் 21 நாட்களாக இருந்தது தற்போது 25 நாட்களுக்கு பின்னரே புக்கிங் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிராமப்புறங்களில் இதற்கு முன்பு 25 நாட்களுக்கு ஒருமுறை கேஸ் புக் செய்ய முடியும் என இருந்த நிலையங்களில் தற்போது 45 நாட்களாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் பலரும் தங்களால் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியவில்லை என புகார் கூறி வரும் நிலையில் இன்றும் சிலர் முன்பதிவு செய்து பல நாட்கள் ஆகியும் தங்களுக்கு டெலிவரி செய்யப்படவில்லை எனக் கூறுகின்றனர். இந்த நிலையில் நீங்கள் சிலிண்டர் முன்பதிவு செய்து உரிய நேரத்தில் உங்களுக்கு டெலிவரி செய்யப்படவில்லை என்றாலோ அல்லது திடீரென உங்களுடைய முன்பதிவு ரத்து செய்து விட்டார்கள் என்றாலே அல்லது கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள் என்றாலோ உடனடியாக அது தொடர்பாக நீங்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் 1800 22 4344 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தரலாம்.HP கேஸ் வாடிக்கையாளர்கள் 1800 233 3555 என்ற எண்ணிலும், HP Gas online complaint portal என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் தரலாம்.உஜ்வாலா பயனாளர்கள் 1800-233-3555 மற்றும் 1800-266-6696 என்ற எண்களை தொடர்பு கொண்டு உங்களது புகாரை பதிவு செய்யலாம்.

இந்நிலையில் வீட்டு உபயோக கேஸ் உற்பத்திக்கு முன்னுரிமை என்பதால் வணிக சிலிண்டருக்கு டிமாண்ட் அடிப்படையில் சென்னையில் ஒரு வணிக சிலிண்டர் ரூ.5000க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிரபல ஓட்டல்களில் உணவு விலையுடன் கேஸ் பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.