தமிழகத்தில் 40 இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன. குறிப்பாக ஜாபர் சாதிக்கு சொந்தமான இடங்களில் சென்னை உள்ள அண்ணா சாலை, புரசைவாக்கம், எழும்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் கடந்த 2024 ஆம் ஆண்டு 2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களிலும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜாபர் சாதிக் கடந்த 2024 ஆம் ஆண்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில்தான் அவர் ஜாமினில் வெளியே வந்திருந்தார்.
இந்தநிலையில் தேர்தல் பணப்பட்டுவாடா நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அண்ணா சாலையில் அவருக்கு சொந்தமான விடுதி ஒன்றிலும், பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக்கு சொந்தமான வீட்டிலும், புரசைவாக்கம் பகுதியில் உள்ள அவரது விடுதியிலும், இதே போல் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முழுமையான சோதனைக்குப் பிறகு அவர் யாருடைய பணத்தையாவது பதுக்கி வைத்திருந்தாரா பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டாரா என்பது குறித்து தெரியவரும் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஆவணங்கள் குறித்தும் முழுமையான சோதனைக்குப் பிறகு தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. சென்னையில் ஒரு சிலர் பணப் பட்டுவாடா செய்வதாக வந்த தகவலில் அடிப்படையில் வருமானவரித் துறை அதிகாரிகளுக்கும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கும் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







