ஏழைகளை தவறாக வழிநடத்துவதே காங்கிரஸின் கொள்கை – பிரதமர் மோடி பேச்சு..!

நாட்டின் ஏழைகளை தவறாக வழிநடத்துவதை காங்கிரஸ் கட்சி கொள்கையாக கொண்டிருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்தியாவில் 9 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளதை, நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற பாஜக அரசின் 9 ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மக்களுக்கான சேவை, நல்ல ஆட்சி நிர்வாகம், ஏழைகளின் நலனுக்காகவே பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சி அர்ப்பணிக்கப்பட்டதாக பெருமிதம் தெரிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு, ரிமோட் ஆட்சியை நடத்தி வந்த காங்கிரஸ் கட்சியால், நாட்டில் ஊழலும், பெருநகரங்களில் பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணித்து, நாட்டு மக்களின் உணர்வுகளையும், 60 ஆயிரம் தொழிலாளார்களின் உழைப்பையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவமதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.