ஓபிஎஸ் உறவினர் வீட்டில் சிபிஐ சோதனை

சென்னை: கடல் அகழ்வாராய்ச்சி மற்றும் துறைமுகங்களில் கட்டுமான பணியை செய்யும் தனியார் நிறுவன, ஓபிஎஸ் உறவினர் வீட்டில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த சோதனையில் பணம் மோசடி தொடர்பான ஆவணங்கள் பல சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள கேப்பிட்டல் டவர் கட்டிடத்தில் ‘ஜான் டி.நல்’ என்ற பெயரில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.இந்த நிறுவனம் கடல் அகழ்வாராய்ச்சி மற்றும் துறைமுகம் பகுதிகளில் கட்டிடங்களை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அப்படி கட்டுமான பணியில் ஈடுபட்ட போது சில முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து துறைமுகம் அதிகாரிகள் சார்பில் அளித்த புகாரின் படி, சிபிஐ அதிகாரிகள் இன்று காலை ஜான் டி.நல் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சிபிஐ அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.அப்போது துறைமுகம் பகுதியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பான ஆவணங்கள், அகழ்வாராய்ச்சி தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினரான சூளைமேடு பஜனை கோயில் தெருவில் உள்ள சுகுமார் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை முடிந்த பிறகு தான் மோசடி தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. சோதனை நடந்து வருவதால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான விபரங்களை சிபிஐ அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.