செங்கல் சூளைகளுக்கு 900 கோடி அபராதம்!

கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம் விதிக்க டெல்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் (டெரி) ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

கோவை மாவட்டம் சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமயம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளால் மலையடிவாரம் அருகே உள்ள ஓடைகள் நீர் வழித்தடங்கள் சட்டவிரோதமாக 1.10 கோடி யூபிக் மீட்டர் அளவு மண் அள்ளப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்ட விரோதமாக செயல்பட்டு 185 செங்கல் சூளைகள் மூட உத்தரவிட்டது. உடனடியாக செங்கல் சூளைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் மூடி சீல் வைத்தனர். இதன் தொடர்ச்சியாக செங்கல் சூலைகளால் ஏற்பட்ட சூழல் பாதிப்புகளை அளவீடு செய்து அதன் உரிமையாளர்களிடம் இழப்பீடு பெற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் டெரி நிபுணர்கள் நான்கு மாதங்கள் ஆய்வு செய்து ரூபாய் 3,000 கோடி அபராதம் விதிக்கலாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரைத்தனர்.அபராத தொகையை மறுபரிசீலனை செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து அபராத தொகை மாற்றி அமைக்கப்பட்டு மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.அதில் சூழல் பாதிப்புகளுக்காக செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம் விதிக்க பரிந்துரைத்துள்ளது.