பீகார் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார்- பா.ஜ.க. அறிவிப்பு..!

பீகார் சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக நிதீஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பீகாரில் 18-வது சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 14-ந்தேதி நடைபெறும். இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் மத்திய அமைச்சரான கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, பீகார் சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக நிதீஷ் குமார் இருப்பார் என கூறினார்.

இந்த தேர்தலில் தொகுதி பங்கீட்டில், கூட்டணி கட்சிகளுடன் எந்தவித வேற்றுமையும் இல்லை என்றும் அதுபற்றி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்றும் விரைவில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் கூறினார். அதுபற்றி அப்போது உங்களுக்கும் தெரியப்படுத்தப்படும் என்றார்.

2020-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதனை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை கொண்ட மகா கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. நிதிஷ்குமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து முதல்-அமைச்சராக இருந்து வருகிறார்.

வருகிற தேர்தலில், முதல்-அமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 107 தொகுதிகளிலும், பா.ஜ.க. 105 தொகுதிகளிலும் போட்டியிடும். மீதம் உள்ள 31 தொகுதிகளை, லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி ஆகியவை பகிர்ந்து கொள்ளும். நிதிஷ் குமார், கடந்த 20 ஆண்டுகளாக 5 முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தொடர்ந்து கூறும்போது, இந்தியா கூட்டணியை குறிப்பிட்டு பேசினார். அவர், மகா கூட்டணியானது ஒரு பிளவுபட்ட வீடு போன்றது என்று கூறினார். தேஜஸ்வி யாதவ், ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்றும் அவர், மகா கூட்டணியின் வேட்பாளர் இல்லை என்றும் காங்கிரஸ் கட்சி முன்பே தெளிவாக கூறி விட்டது.

அதனால், மகா கூட்டணி தலைமை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எங்களுடைய கூட்டணியில், கொள்கை, தலைமை மற்றும் நோக்கம் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டது. இதில் அதிருப்தி எதுவும் இல்லை என்றும் கூறினார்.