கர்ப்பிணிகள் கவனத்திற்கு… மிக கனமழை எச்சரிக்கை… பிரசவ காலத்திற்கு முன்பே மருத்துவமனையில் சேருங்கள்- சுகாதாரத்துறை அட்வைஸ்.!!

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனையடுத்து பேரிடர் மீட்பு படை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிகனமழை இருக்கும் பகுதிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் விடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரப் பணியாளர்கள் 24 மணிநேரமும் தயாராக இருக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் அவசரகால மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் போதுமான படுக்கைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மின்வெட்டு ஏற்பட்டால் மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்காத வகையில் ஜெனரேட்டர் மூலம் மின்விநியோகம் கொடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

நிவாரண முகாம்களில் மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்க வேண்டும். முகாம்களில் சுகாதாரமான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

அதிக ஆபத்து இருக்கும் பகுதிகளை கண்டறிந்து அத்தியாவசிய மருந்து பொருட்களுடன் விரைவு மீட்புக் குழுக்களின் உதவியுடன் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருக்கும் கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ தேதிக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் குளோரினேஷன் செய்யப்பட வேண்டும். திடக்கழிவுகள் மற்றும் இறந்த விலங்குகளை உடனடியாக பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட்டால், உடல்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும்.

மருத்துவமனைகளில் மற்றும் நிவாரண முகாம்களில் கழிவறை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.