வீடு மற்றும் மனைகள் விற்பனையின் போது பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஒரே நாளில் வில்லங்க சான்று பெறும் டிஜிட்டல் நடைமுறை பொதுமக்களுக்கு பெறும் பயனளிப்பதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி கோவையில் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அசுர வளர்ச்சியை நோக்கி செல்லும் கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை பெரும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் வியாழம் எனும் புதிய மனைப்பிரிவுகள் திட்ட துவக்க விழாவில், கலந்து கொண்ட அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர், வீடு மற்றும் மனைகள் விற்பனையின் போது பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஒரே நாளில் வில்லங்க சான்று பெறும் டிஜிட்டல் நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ள நிலையில் இந்த திட்டம், பொதுமக்களுக்கு பெறும் பயனளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ரியல் எஸ்டேட் துறையில் மலைகள் சார்ந்து உள்ள பகுதிகளில் உள்ள நிலங்களை விற்பனை செய்வதில், மலைகள் பாதுகாப்பு குழுமத்தில் உள்ள ஆக்கா விதிமுறையை எளிமைபடுத்த தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், அரசு இதில் கவனம் செலுத்தி விதிமுறைகளை எளிமைபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.அண்மையில் தமிழக அரசு மகளிருக்காக அறிவித்துள்ள நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை நில உடைமையாளர்களாக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் பாராட்டுக்குரியது என அவர் கூறினார். கோவையில் நகர் புற வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியான மாஸ்டர் பிளான் திட்டத்தில் சுமார் 1200 சதுர கிலோமீட்டர் வடிவமைக்கப்பட்டுள்ள மாஸ்டர் பிளான் திட்டம் முழுமை பெற்றால் கோவை நகரம் வளர்ச்சியில் பெரும் உச்சம் பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிர்வாகிகள் நேரு நகர் நந்து,செந்தில் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.