ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், முப்படைகளின் திறனை மேம்படுத்த ரூ.79 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கு முன்பு, ஆகஸ்டு 5-ந் தேதி ரூ.67 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு இதுவே பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் இரண்டாவது பெரிய முடிவாகும்.
நேற்றைய ஒப்புதல் திட்டங்களில் இந்திய கடற்படைக்காக போர்க்கப்பல்கள், 30 எம்எம் ரக கடற்படை பீரங்கிகள், இலகுரக நீர்மூழ்கி குண்டுகள் உள்ளிட்ட உபகரணங்கள் அடங்குகின்றன. போர்க்கப்பல்கள், கனரக சாதனங்களையும், தரைப்படை வீரர்களையும் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன. இலகுரக நீர்மூழ்கி குண்டுகள், எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களைத் தாக்க பயன்படும்.
மேலும், இந்திய ராணுவத்துக்காக நாக் ஏவுகணை அமைப்பு, எம்கே-2 ரக ஏவுகணைகள் மற்றும் எலக்ட்ரானிக் உளவு அமைப்புகள் வாங்கப்பட உள்ளன. எதிரிகளின் போர் வாகனங்கள் மற்றும் பதுங்கு குழிகளை எதிர்கொள்வதற்கும் இவை பயன்படும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





