அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறு பேச்சு

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவின் தொடர் பேச்சுகள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 7-வது முறையாக வெற்றிபெற்றுள்ளார்.வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் உடன்குடி மற்றும் திருச்செந்தூரில் நடைபெற்றது. கடந்த 16-ம் தேதி உடன்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ் ணன், ‘சென்னை கொளத்தூர் தொகுதியை ஸ்டாலின் சிங்கப்பூர் போல மாற்றி வைத்திருந்தார்’ என்றார்.அப்போது, அந்த தொகுதி மக்கள் அவரை தோற்கடித்து விட்டனர் எனும்போது சர்ச்சையாக சில வார்த்தைகள் பயன்படுத்தினார். மேலும், ‘திமுக வரலாறு தெரியாமல் பேசும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு திருச்செந்தூரில் போட்டியிட தயாரா?’ என சவால் விடுத்தார்.தொடர்ந்து திருச்செந்தூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ‘திமுக தயவில் வென்ற காங்கிரஸ் கட்சியினர் துரோகம் செய்துவிட்டு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். துரோகம் செய்த ராகுல் காந்தி முகத்தில் தமிழக மக்கள் கரியை பூசுவார்கள்’ என்றார்.மேலும், ‘அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து இதுபோன்று பேசினால் அவர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும்போது அவரது சட்டைகளையெல்லாம் கிழிக்கக்கூடிய சூழ்நிலையை எங்கள் தொண்டர்கள் ஏற்படுத்துவார்கள்’ எனவும் கடுமையாக பேசினார்.

அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சுகளுக்கு காங்கிரஸ் மற்றும் தவெகவினர் எதிர்வினையாற்றியுள்ளனர். இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பெருமாள்சாமி, ‘ராகுல் காந்தி பற்றி பேச அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எந்த தகுதியும் இல்லை.அவர் தனது கொச்சைத்தனமான பேச்சுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இனிமேலும் எல்லை மீறி பேசினால், அவர் தூத்துக்குடி மாவட்டத்தின் எந்த பகுதிக்கு வந்தாலும், காங்கிரஸ் தொண்டர்களைத் திரட்டி அவர் மீது கருப்பு மை வீசி போராட்டம் நடத்துவோம்’ எனத் தெரிவித்தார்.

இதேபோல், முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் குறித்து பொதுமேடையில் அவதூறாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக வழக்கறிஞர் அணியினர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.திமுக மற்றும் காங்கிரஸ், தவெக இடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தை போர் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.