மேற்காசியவில் நிலவும் போர்பதற்றத்தால் விமான எரிபொருள் கட்டணம் அதிகரித்துள்ளது. இதனை ஈடுகட்டும் விதமாக ஏர் இந்தியா உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களுக்கு கூடுதல் கட்டணங்களை (surcharge) அறிவித்துள்ளது.
இதனால், ஏர் இந்தியா விமான கட்டணம் அதிகரிக்க உள்ளது. ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் விமான கட்டணம் உயர இருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக ஏர் இந்தியா உள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்த ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை டாடா குழுமம் கடந்த 2022 -ஆம் ஆண்டு கையகப்படுத்தியது.
உள்நாடு, வெளிநாடு என பல்வேறு வழித்தடங்களில் நூற்றுக்கணக்கான விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருகிறது. நாட்டின் முதன்மை விமான சேவை நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா, தற்பொது எரிபொருளுக்கு கூடுதல் கட்டணத்தை அறிவித்துள்ளது.. உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த கூடுதல் கட்டணத்தை அறிவித்துள்ளது.
ஜெட் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதால் இந்த கூடுதல் கட்டணம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. மூன்று கட்டங்களாக இந்த கூடுதல் கட்டணம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டு இருப்பது தங்கள் வருத்தம் அளிப்பதாகவும் அதேநேரத்தில் தவிர்க்க முடியாது என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா போரால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தை 20 சதவீதம் கையாளும் ஹார்மூஸ் நீரிணையும் மூடப்படுவதாக ஈரான் அதிகரித்து இருப்பதால் கச்சா எண்ணெய் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய சூழலில்தான், ஏர் இந்தியா இந்த கூடுதல் கட்டணத்தை அறிவித்துள்ளது. எரிபொருள் கூடுதல் கட்டணம் விதிக்கப்படாமல் இருந்தால், இயக்க செலவுகளை சில விமானங்களால் ஈடு செய்ய முடியாது என்றும் இதனால், ரத்து செய்யக்கூடிய நிலை வரும் எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு எரிபொருள் கூடுதல் கட்டணமாக 10 டாலர் விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கான சர்ஜார்ஜ் 30 டாலரில் இருந்து 90 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கான கட்டண உயர்வு 20 டாலரில் இருந்து 60 டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் கட்டணம் (Surcharge) அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு, நிலமை மேம்பட்டால் அதற்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும் என்றும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது. டாடா குழுமத்தின் மலிவு விலை விமான சேவையான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எரிபொருள் கூடுதல் கட்டணம் எதையும் அறிவிக்கவில்லை. இது பயணிகளுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்த மாத துவக்கத்தில் இருந்தே விமான எரிபொருள் (ATF) கணிசாமாக உயர்ந்து வருகிறது. விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. விமான இயக்க செலவில் 40 சதவீதம் எரிபொருளுக்காகவே செலவிடப்படுவதால், இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்று விமான போக்குவரத்து வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தியாவில், டெல்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய மெட்ரோ நகரங்களில் ATF மீது விதிக்கப்படும் அதிகமான உற்பத்தி வரி (excise duty) மற்றும் மதிப்புக் கூட்டு வரி (VAT) காரணமாக இந்த அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் செலவுகள் மேலும் உயர்ந்து, விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளில் பெரும் அழுத்தம் உருவாகியுள்ளது என்று ஏர் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் இல்லாததால், உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு அல்லது சரிவு ஏற்பட்டால் அதன் தாக்கம் நேரடியாக இந்திய விமான நிறுவனங்களுக்கு ஏற்படுகிறது. மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான்-அமெரிக்கா போர் உலகளாவிய அளவில் இயற்கை எரிவாயு விநியோகத்தையும் பாதித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஹோர்முஸ் நீரிணை போர் பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியதால், அந்தப் பகுதியில் உள்ள முக்கிய துறைமுகங்களில் 750-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் சிக்கியுள்ளன. இந்தியா தனது இயற்கை எரிவாயு தேவைகளில் சுமார் 50 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து வாங்குகிறது. அதில் 20 சதவீதம் கத்தார் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.








