அதிமுகவின் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில் களம் காணும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மொத்தம் 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இந்த இறுதிக்கட்டப் பட்டியலில் நட்சத்திரத் தொகுதிகளான சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆயிரம் விளக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியும், அண்ணா நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் போட்டியிடுகின்றனர். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஆதிராஜாராம் களம் இறக்கப்பட்டுள்ளார்.

சென்னையின் மற்ற முக்கிய தொகுதிகளில், துறைமுகம் தொகுதியில் ராயபுரம் மனோ, விருகம்பாக்கம் தொகுதியில் விருகை வி.என். ரவி, தியாகராய நகர் தொகுதியில் பி. சத்தியநாராயணன் (எ) தி.நகர் சத்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், வேளச்சேரி தொகுதியில் எம்.கே. அசோக், சோழிங்கநல்லூர் தொகுதியில் கே.பி. கந்தன் மற்றும் வில்லிவாக்கம் தொகுதியில் எஸ்.ஆர். விஜயகுமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே. நகர் தொகுதியில் ஆர்.எஸ். ராஜேஷ் போட்டியிடுகிறார்.

கொளத்தூர் தொகுதியில் பி. சந்தானகிருஷ்ணன் என்பவரை அதிமுக தலைமை நிறுத்தியுள்ளது. ஆலந்தூர் தொகுதியில் எஸ். சரவணன், திருச்சுழி தொகுதியில் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் மற்றும் ஆலங்குடி தொகுதியில் தன. விமல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தனித் தொகுதிகளான திட்டக்குடிக்கு என். முருகுமாறன், திரு.வி.க நகருக்கு ஏ. பொற்கொடி மற்றும் எழும்பூர் தொகுதிக்கு அபிஷேக் ரங்கசாமி ஆகியோர் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அ.தி.மு.க ஆட்சி மன்றக் குழுவின் பரிசீலனைக்குப் பிறகு இந்த வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தலைமைக்கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர் தேர்வு நிறைவடைந்துள்ளது.