தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கும் நிலையில் இரண்டு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் எடப்பாடி பழனிச்சாமி 4 கட்டங்களாக சுமார் 180 தொகுதிகளில் பரப்புரையை முடித்துள்ளார்.
5 ஆவது கட்ட தேர்தல் பரப்புரையை இன்னும் தொடங்கவில்லை. குறிப்பாக கரூரில் நடந்த விஜய் கட்சியின் கூட்டத்தில் 41 பேர் பலியாகினர்.இதற்குப் பின்னர் 2 மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை செய்திருந்தாலும் அடுத்தகட்ட தேர்தல் பரப்புரையை முழுவீச்சில் தொடங்கவிலலை.
நடிகர் விஜய் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கி இருக்கும் நேரத்தில் அவருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவ்வாறு குரல் கொடுப்பதன் மூலம் விஜய்யை தங்கள் கூட்டணிக்குள் வரவழைத்து விடலாம் என்ற கணக்கை போட்டு செயல்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது.
ஆனால், விஜய்யோ நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என கூறிவிட்டார்.அதற்கு, எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் எனவும் துணை முதலமைச்சர் வேண்டுமானால் விஜய்க்கு வழங்கலாம் எனவும் பேசப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனை மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் உதயகுமாரும் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் கெஞ்சாத குறையாக வெளிப்படையாகவே தவெக அதிமுகவுடன் கூட்டணிக்கு வர வேண்டும். ஆந்திராவில் பவன் கல்யாண் எப்படி கூட்டணி அமைத்து வென்று துணை முதலமைச்சரானாரோ, அதுபோல விஜய்யும் செயல்பட வேண்டும் என்று கூறினார்.அதற்கு விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.
இதுபோன்ற நெருக்கடியான சூழலில் இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி, அடுத்தக்கட்ட சுற்றுப் பயணத்தை அறிவிக்காமல் இருந்து வருகிறார்.
சேலத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பொறுப்பாளர் பாண்டா உள்ளிட்டோர் சமீபத்தில் சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றனர். அப்போது பிரிந்து கிடக்கும் அதிமுக நிர்வாகிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் தேர்தலை பலத்தோடு சந்திக்கலாம் எனவும் அதற்குப் பிறகு தேர்தல் பரப்புரையைத் தொடரலாம் எனவும் அவர்கள் கூறியதாகத் தெரிகிறது.
மேலும் கட்சிக்கு சசிகலா எனவும், ஆட்சிக்கு நீங்கள் (எடப்பாடி) என்றும் இருந்தால் ஒருங்கிணைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறியதாகவும், இதற்கு எடப்பாடி மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் 5 ஆம் கட்ட பரப்புரையை அவர் தொடங்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் எடப்பாடியின் பரப்புரைக்கு பாஜக தடை விதித்து உள்ளது. அதிமுகவை ஒருங்கிணைக்க அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதற்காக எடப்பாடியை தில்லிக்கு அழைத்துள்ளதாகவும் அங்கு என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்தே எடப்பாடி பழனிச்சாமியின் அடுத்தகட்ட பரப்புரைப் பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது..





