டிரம்ப் பேசுவது போல வீடியோ வைத்து நூதன மோசடி… கர்நாடகாவில் ரூ.1 கோடி அபேஸ்.!!

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஒரு மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. இதில் பலரும் தங்கள் பணத்தை இழந்துள்ள நிலையில், அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

டொனால்ட் டிரம்பின் பெயரைப் பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்த காலத்தில் அறிவியல் பல மடங்கு வளர்ந்துவிட்டது. அதற்கேற்ப மோசடி பேர்வழிகளும் கூட தங்களை அப்டேட் செய்து வருகிறார்கள். இப்படி கூட மோசடி நடக்குமா என நாம் யோசிக்காத வழிகளிலும் இப்போது மக்களை  ஏமாற்றி வருகிறார்கள். குறிப்பாக சைபர் மோசடிகள் பல மடங்கு அதிகரித்துவிட்டன.

சைபர் மோசடிகளில் நேரில் பார்க்கத் தேவையில்லை. ஒரே நாளில் அடுத்தடுத்து பலரிடம் பேச முடியும் என்பது போன்ற காரணங்களால் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இப்போது அப்படி தான் டிரம்ப் பெயரைச் சொல்லி நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் மிக பெரிய மோசடி அரங்கேறியுள்ளதாக டெக்கன் குரோனிக்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரைப் பயன்படுத்தி கர்நாடகாவில் மோசடி நடந்துள்ளது. இப்படி சைபர் குற்றவாளிகள் 150க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.1 கோடிக்கு அதிகமான தொகையை ஏமாற்றியுள்ளனர். பணத்தை இழந்த பொதுமக்கள் இப்போது தங்கள் பணத்தை மீட்டெடு தருமாறு போலீசார் நிலையத்தை அணுகியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் பெயரை வைத்து நம்ம ஊரில் மோசடியா.. அப்போது எதுவும் அறியாத ரூரல் மக்கள் தான் ஏமாந்து இருப்பார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அப்படி இல்லை. கர்நாடக தலைநகர், பெங்களூர், தமகுரு, மங்களூரு மற்றும் ஹாவேரி எனப் படித்த மக்கள் உள்ள பகுதிகளிலும் கூட மோசடிகள் நடந்துள்ளன. டிரம்ப் பெயரைச் சொன்னால் காசு தருவார்களா என நீங்கள் கேட்கலாம்.. அவர்கள் ஏமாற ஒரு காரணம் இருந்திருக்கிறது.

அதாவது டிரம்ப் பேசுவது போன்ற ஒரு ஏஐ இமேஜ்ஜை உருவாக்கி அதை அனுப்பியே ஏமாற்றியுள்ளனர். டிரம்ப் ஹோட்டலில் முதலீடு செய்ய அவரே அழைப்பு விடுக்குமாறு அந்த வீடியோ இருக்கிறது. ஏற்கனவே நமது நாட்டில் மும்பை மற்றும் டெல்லியில் டிரம்ப் டவர் இருப்பதால் அதுபோன்ற ஒரு முயற்சி என்றே மக்கள் ஏமாந்துள்ளனர். குறுகிய காலத்தில் முதலீட்டை இரண்டு மடங்காகத் திருப்பி எடுக்கலாம் என டிரம்பே சொல்வது போல அந்த வீடியோ இருந்ததால் பலரும் முதலீடு செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஹாவேரி சைபர் கிரைம் ஆய்வாளர் சிவசங்கர் கூறுகையில், “ஈஸியாக பணத்தைச் சம்பாதிக்கலாம் என்றே அவர்களை ஏமாற்றியுள்ளனர். மேலும், ஒர்க் ஃபர்ம் ஹோம் முறையில் வேலை வாய்ப்பு வழங்கவுள்ளதாகக் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே பலரும் பணத்தைக் கொடுத்துள்ளனர். ஹாவேரியில் மட்டும் இதுபோல 15 பேர் ஏமாந்துள்ளனர்” என்றார்.

இதற்காக ‘டிரம்ப் ஹோட்டல் ரென்டல்’என்ற பெயரில் செயலி ஒன்றையும் மோசடி பேர்வழிகள் வெளியிட்டுள்ளனர். இதை எல்லாம் வைத்துப் பார்த்தே அதை உண்மை என்று அவர்கள் நம்பியுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “முதலில் கணக்கை ஓபன் செய்ய ரூ.1,500ஐ செலுத்தச் சொன்னார்கள். பிறகு எங்களைப் பற்றி விரிவாக எழுதித் தரச் சொன்னார்கள். எல்லாவற்றையும் நாங்கள் செய்தோம். பிறகு சிறுக சிறக தொகையை வாங்கிக் கொண்டே போனார்கள். அப்படியே ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பிடுங்கிவிட்டனர். இப்போது நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை” என்றார.