நீலகிரி மாவட்டம், கோத்தகிரி – நெடுகுளா சாலையில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் வசிக்கும் லட்சுமி என்பவரது வீட்டில், ஜன்னலை உடைந்து சிறுத்தை வீட்டிற்குள் நுழைந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், அனைவரும் ஒரே அறையில் இருந்ததால் 7 பேரும் உயிர் பிழைத்துள்ளனர்.அந்த வீட்டில் லட்சுமி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் 7 பேர் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது உணவு தேடி வந்த சிறுத்தை ஒன்று, வீட்டின் மற்றொரு அறையில் இருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்துத் திறந்து கொண்டு உள்ளே புகுந்தது. அந்த அறையில் இருந்த வளர்ப்பு நாயைக் கவ்விப் பிடித்துக் கொன்ற சிறுத்தை, மீண்டும் அதே ஜன்னல் வழியாக வெளியே தூக்கிச் சென்றது. சத்தம் கேட்டு விழித்துப் பார்த்த குடும்பத்தினர், சிறுத்தை நாயை இழுத்துச் செல்வதைக் கண்டு அலறினர்.
குடும்பத்தினர் அனைவரும் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால், சிறுத்தையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பினர். ஒருவேளை வேறு யாராவது அந்த அறையில் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வளர்ப்புப் பிராணிகளைத் தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தைகள், தற்போது ஜன்னல்களை உடைத்து வீட்டிற்குள்ளேயே நுழையத் தொடங்கியிருப்பது மக்களை உறைய வைத்துள்ளது. எனவே, வனத்துறையினர் அந்த சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








