சினிமா பட பாணியில்… நகை தொழிலாளியை காரில் கடத்தி துணிகரக் கொள்ளை

நகை தொழிலாளியை கடத்தி, 41 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

கோவை, கேரளா தேசிய நெடுஞ்சாலையில், சினிமா பாணியில் அரங்கேறிய துணிகரக் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாளையார் சோதனைச் சாவடி அருகே தங்க நகை தொழிலாளியைக் காரில் கடத்திச் சென்று, அவரிடமிருந்த 41 லட்சம் ரூபாயைப் பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் பட்டாம்பியைச் சேர்ந்த 56 வயதான லட்சுமணன் என்பவர், தங்கம் தொடர்பான வேலை செய்து வருகிறார். இவர் 200 கிராம் தங்கக் கட்டிகளை விற்றுவிட்டு, அதற்குக் கிடைத்த 41 லட்சம் ரூபாய் பணத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் கேரளா நோக்கிச் சென்றுள்ளார்.
கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், வாளையார் சோதனைச் சாவடியைக் கடந்து 200 மீட்டர் தொலைவில், லட்சுமணன் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு ஸ்விப்ட் கார் பின் தொடர்ந்து வந்துள்ளது.

அந்த காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், லட்சுமணனின் இருசக்கர வாகனத்தை வழிமறித்துக் கீழே தள்ளியது. அதிர்ச்சியடைந்த லட்சுமணனை அந்த மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்றது. அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும், அந்த கும்பல் கையோடு எடுத்துச் சென்றது.அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 41 லட்சம் ரூபாய் பணத்தை, அந்தக் கும்பல் கொள்ளையடித்தது. கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை அருகே மேனாம்பாறை என்ற இடத்தில், லட்சுமணனை காரில் இருந்து கீழே இறக்கிவிட்ட கொள்ளையர்கள், அவரிடமிருந்த செல்போனையும் பிடுங்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட லட்சுமணன் இதுகுறித்து கே.ஜி சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் எண்ணை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் நடந்த இந்தக் கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவம்,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.