உலக தங்கம் விலை அடுத்த சில வாரங்களில் கணிசமான ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் இரண்டாவது பெரிய தங்க உற்பத்தி நாடான ரஷ்யா மே 1 முதல் தங்க ஏற்றுமதியை கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளது.அதே நேரத்தில் துருக்கி தன்னிடம் உள்ள தங்கத்தை தொடர்ந்து விற்று வருகிறது. இந்த எதிரெதிர் நடவடிக்கைகள் தங்க சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஒருபுறம் ரஷ்யா ஏற்றுமதியை தடுக்கும் நிலையில், துருக்கி தன்னிடம் உள்ள தங்கத்தை தொடர்ந்து விற்று வருகிறது. உலகின் டாப் 10 அதிக தங்க கையிருப்பு கொண்ட நாடுகளில் ஒன்றான துருக்கி, ஜனவரி 2026-ல் 603 டன் தங்கம் வைத்திருந்தது. ஏப்ரல் மாதத்தில் இது 480 டன்னாக குறைந்துள்ளது.அதாவது, இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 120 டன் தங்கத்தை விற்றுள்ளது. துருக்கி மத்திய வங்கி இந்த தங்க விற்பனை இரண்டு முக்கிய முறைகளில் நடந்தியுள்ளது. ஒன்று கோல்ட் ஸ்வாப் எனப்படும் பரிமாற்ற முறை, மற்றொன்று அவுட்ரைட் செல்லிங் எனப்படும் நேரடி விற்பனை.
கோல்ட் ஸ்வாப் என்பது ஒரு வகையான நிதி ஒப்பந்தம். இதன் மூலம், டர்க்கியின் மத்திய வங்கி தன்னிடம் இருக்கும் தங்கத்தை மற்றொரு வங்கிக்கு கொடுத்து, அதற்குப் பதிலாக அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு நாணயத்தை பெறுகிறது.இது நிரந்தர விற்பனை அல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, டர்க்கி அந்த டாலரை திருப்பி கொடுத்து, தன்னுடைய தங்கத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் உரிமை கொண்டுள்ளது.அதாவது, இது ஒரு கடன் போன்றது. தங்கத்தை அடமானமாக வைத்து பணம் பெறும் முறை என்று எளிதாக சொல்லலாம். குறுகிய காலத்தில் நாணய அழுத்தத்தை சமாளிக்க இது உதவுகிறது.
இரண்டாவது முறை அவுட்ரைட் செல்லிங். இதில், தங்கம் நேரடியாக சந்தையில் விற்கப்படுகிறது. இந்த முறையில் விற்கப்பட்ட தங்கம் மீண்டும் டர்க்கியின் கையிருப்புக்கு திரும்ப வராது. அது முழுமையாக சந்தைக்குள் சென்று விடும்.இதனால், தங்க கையிருப்பு குறையும் அபாயம் உள்ளது. பின்னர் தேவையானால், மீண்டும் சந்தையில் இருந்து தங்கத்தை வாங்க வேண்டிய நிலை உருவாகும்.
துருக்கி தனது கச்சா எண்ணெய் மொத்த தேவையில் 90 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் எரிசக்தி செலவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் துருக்கியின் நாணயமான லிரா ஏற்கனவே பெரும் வீழ்ச்சியில் உள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க தங்கத்தை விற்று டாலர் சேகரித்து, லிராவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது.
இன்றைய சூழலில் ஒரு நாடு தங்கத்தை விற்கிறது என்றால் அது சாதாரண நடவடிக்கை அல்ல, அது பெரும்பாலும் பொருளாதாரத்தையும், நாட்டின் நிதிநிலையை மேம்படுத்தி திவால் ஆகாமல் தப்பிக்க கடைசிகட்ட நடவடிக்கையாக தான் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாடுகளின் பொருளாதாரத்தை தொடர்ந்து இயக்கவும், நிதி நிலையை நிலைநிறுத்தவும் வேண்டிய கட்டாயத்தில், கையிருப்பில் உள்ள தங்கத்தை பயன்படுத்தி செலவுகளை சமாளிக்கும் நிலை உருவாகியுள்ளது. தற்போதைய உலக பொருளாதார சூழலில் பல நாடுகள் இதே போன்ற அழுத்தத்திற்குள் செயல்பட்டு வருகின்றன.
அமெரிக்கா – ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை இன்று ஒரு நாளில் மட்டும் 15-16 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் துருக்கி இனி வரும் நாட்களில் தங்கத்தை விற்பனை செய்வது குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை ஈரான் கண்டித்துள்ளது. மேலும் அமெரிக்காவிடம் இஸ்ரேல் இந்த தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் போர் நிறுத்த முடிவில் இருந்து பின்வாங்கப்படும் என்று எச்சரித்துள்ளது.இதற்கு பதில் அளித்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் விவகாரம் சேர்க்கப்படவில்லை என அறிவித்துள்ளது.மேலும் இஸ்ரேல் லெபனான் மீது தனது தாக்குதலை தொடர்ந்தால் ஹார்மூஸ் வழித்தடத்தை மீண்டும் மூடப்படும் என அறிவித்துள்ளது.இதனால் போர் அச்சம் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஆனால் முதலீட்டு சந்தையில் இதன் தாக்கம் இன்னும் எதிரொலிக்கவில்லை.








