முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு, திரைமறைவில் சதித்திட்டம் அரங்கேறியதாக புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா அளித்த புகாரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பேரத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக்குமார் ஆகியோர் கூறியதன் பேரில்தான் நடத்தியதாக கைதானவர்கள் கூறியுள்ளார்களாம். இதனால் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.வெளிநாடு தப்புவதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எம்.எல்.ஏ. என்.இளையராஜா சில தினங்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு என்ற நபர், தான் இந்திய அரசியல் ஜனநாயக உத்திகள் என்ற கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த சிலர் கேட்டு கொண்டதன்பேரில் தொடர்பு கொள்வதாகவும், நேரில் சந்திக்க வேண்டும் என்றும் பேசினாராம். ஆனால், தான் வேறு பணியில் இருப்பதாக கூறி இளையராஜா தொடர்பை துண்டித்தாராம். மீண்டும் தொடர்பு கொண்ட மேற்படி திருநாவுக்கரசு, இளையராஜாவிடம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளோம். ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள் நடந்துகொள்ள வேண்டும். அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டினாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளையராஜா எனக்கு விருப்பமில்லை. இனிமேல் என்னிடம் பேசாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறியபோது தான் பேசியது குறித்து வெளியே தெரிவித்தால் இளையராஜாவும் அவரது குடும்பத்தினரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று திருநாவுக்கரசு மிரட்டினாராம். இதனால் தவெக எம்எல்ஏ என்.இளையராஜா 29.06.2026 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது ஊழியரான தன்னிடம் தனது மக்கள் பணியை செய்யக் கூடாது என்பதற்காகவும், தனது பேச்சுக்கு உடன்பட லஞ்சம் தர முயற்சித்ததோடு தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்புலமாக செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார். அந்த புகார் மனுவின் அடிப்படையில் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாக கருதப்படும் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன், பெசன்ட் நகரை சேர்ந்த நரேஷ், கரூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்களான ரமேஷ், கார்த்தி, சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த செல்வன், மணப்பாக்கத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சீனிவாசன், அஸ்தினாபுரம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 8 பேரை தனிப்படை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.
கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க ரூ.180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்று கூறினாராம். மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக்குமார் ஆகியோர் கூறியதன் பேரில்தான் இந்த பேரத்தை நடத்தியதாகவும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் போலீசாரின் கைது நடவடிக்கையில் சிக்காமல் இருக்க தலைமறைவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக்குமார் ஆகிய 2 பேரும் வெளிநாடு தப்பி செல்லாமல் இருப்பதற்காக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட்’ நோட்டீசை திருவல்லிக்கேணி போலீசார் அனுப்பி உள்ளார்கள். இதனையொட்டி விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகிய 2 பேருக்கும் திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் பிறப்பித்திருக்கிறார்கள். இந்த சம்மனுடன் திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் , கரூர் அருகே ராமேஸ்வரபட்டியில் உள்ள அவரது பூர்வீக வீட்டுக்கு சென்று, செந்தில் பாலாஜியின் பெற்றோர் வேலுசாமி-பழனியம்மாளிடம் வழங்கினார்கள். அந்த சம்மனில் அவர்கள் 2 பேரும் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பேரில் அவர்கள் 2 பேரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை ஆஜராகவில்லை என்றால் அவர்கள் 2 பேர் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினார்கள்.
இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 9-வது நபராக மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணனை திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.இவர் வழக்கில் கைதான திருநாவுக்கரசுவின் கார் டிரைவர் ஆவார். இதுவரையில் செந்தில் பாலாஜி இந்த புகார்கள் குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கவில்லை. ஒருவேளை விளக்கம் அளித்தால் என்ன நடந்தது என்பது தெரியவரும்.







