எல்லையில் காவலர்களாகும் பாம்புகள், முதலைகள்!

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவல்களை தடுக்க எல்லை பாதுகாப்பு படை புதிய முயற்சியினை எடுக்க உள்ளது.அதாவது பாம்பு மற்றும் முதலைகள் போன்ற ஊர்வன உயிரினங்களை ஆயுதமாக பயன்படுத்த போகின்றதாம். சதுப்பு நிலப் பகுதிகளான 175 கிமீ தூரத்திற்கு பாம்பு மற்றும் முதலைகளை ஆயுதமாக பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறதாம்.

இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக வங்கதேசம் உள்ளது. இந்தியாவின் மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, மிசோரம், மேகாலயா என 5 மாநிலங்கள் எல்லையை பகிர்ந்து கொள்கின்றது வங்கதேசம். மொத்தம் 4,06.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு இருநாடுகளும் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனை கண்காணிக்க இந்தியா தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. எனினும், சிக்கலான நிலப்பரப்புகள், சவாலான கால சூழல்கள் போன்றவை எல்லை பாதுகாப்பு படையினருக்கு இந்த ஊடுருவலை சமாளிப்பது பெரும் சவாலாக உள்ளது.

இந்த நிலையில் தான் வங்கதேசம் எல்லையில் உள்ள ஆற்றுப் பகுதிகளில் அத்துமீறல்களைத் தடுக்க, பாம்புகள் மற்றும் முதலைகள் போன்ற உயிரினங்களைப் பயன்படுத்துவது குறித்து பிஎஸ்எஃப் களப் பிரிவுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவல் பிஎஸ்எஃப்-இன் உள்நாட்டுத் தகவல்தொடர்பு ஆவணத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

சமீப நாட்களாகவே இந்தியா – வங்கதேச உறவு முன்பு போல் இல்லாமல் மோசமடைந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சட்டவிரோத ஊடுருவல்களை தடுக்க ஏற்கனவே பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. டிரோன்கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட நவீன முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் சட்டவிரோத ஊடுருவல்களை தடுக்க பாம்பு, முதலை போன்ற ஊர்வன உயிரினங்களை தடுப்பு ஆயுதங்களாக பயன்படுத்த எல்லை பாதுகாப்பு படை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மொத்தம் 4,06.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு இருநாடுகளும் எல்லையை பகிர்ந்து கொள்ளும் நிலையில், இதில் 175 கிமீ தூரத்துக்கு அடர் சதுப்பு நிலங்கள் உள்ளன. இந்த பகுதியை கண்காணிப்பது என்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது.வங்கதேசத்துடனான கிழக்கெல்லைப் பகுதிகள் பெரும்பாலும் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியவை. எனவே, இப்பகுதியின் நிலப்பரப்பு பாதுகாப்பு வேலிகள் அமைப்பதற்கு கடினமாக உள்ளது. எனவே தான் இப்பகுதிகளில் பாம்பு மற்றும் முதலைகளை விடுவதனால் அப்பகுதி வழியாக வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக ஊடுருவ முடியாமல் போகும். இந்த நடவடிக்கை உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக பிஎஸ்எஃப் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் மக்கள் தொகை மிகுந்த இந்த எல்லைப் பகுதிகளில் பாம்பு, முதலை போன்ற ‘ஊர்வனங்களை’ பயன்படுத்துவது, குறிப்பாக வெள்ள காலங்களில், இருபுறமும் உள்ள கிராம மக்களுக்குக் கணிசமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரி கூறுகையில், “பாம்பு மற்றும் முதலைகளை பயன்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இது சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான ஒரு ஆரம்பகட்ட வழிகாட்டுதல் தான். இந்த ஊர்வனங்களை எவ்வாறு பெறுவது, இங்கு பாம்பு மற்றும் முதலைகளை விடுவதன் மூலம், நதிக்கரைகளில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பது போன்ற சவால்களும் உள்ளன” என்றும் தெரிவித்தார்.