மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென 20-26 சதவீதம் உயர்ந்துள்ளது.பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 116.30 டாலராகவும், டபிள்யூடிஐ 115.41 டாலராகவும் உயர்ந்துள்ளது.இது 2022 ஜூலைக்குப் பிறகு இல்லாத உயர்வாகும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இன்று ஒரு நாளில் மட்டும் கச்சா எண்ணெய் விலை 25 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது என்பது தான்.ஈரான் படைகள் ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளதால், உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இது சர்வதேச எரிபொருள் சந்தையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் ஈரானில் புதிய ஆட்சி அமையப்பட்டு உள்ள காரணத்தால் அமெரிக்கா – இஸ்ரேலின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஈரான் போர் தீவிரமடைந்தது கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. லெபனான் மீது இஸ்ரேல் புதிய தாக்குதல்கள் நடத்தியுள்ளது. ஈரானில் உள்ள நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் கச்சா எண்ணெய் தளங்கள் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதெல்லாம் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஈரான் தனது புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனியை நியமித்துள்ளது. இவர் மறைந்த அயதுல்லா அலி காமேனி-யின் மகன் என்பதால் போர் தீவரம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.ஈரானின் முக்கிய படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மொஜ்தபா காமேனி தேர்வுக்கு ஆதரவு அளித்துள்ளது.
இதன் மூலம் ஈரானின் கடுமையான நிலைப்பாடு தொடரும் என்பதைக் காட்டுகிறது. ஏற்கனவே டிரம்ப ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் மூலம் பூர்த்தி செய்து வரும் வேளையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஒவ்வொரு டாலர் விலை உயர்வுக்கும் இந்தியா 2 பில்லியன் டாலர் கூடுதலாக செலவழிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கும் காரணத்தால் இந்தியாவில் விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக இன்று பதிவாகியுள்ள 25 சதவீத உயர்வு அனைத்து தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
2025ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக 167 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது.இந்தியாவுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தான் 50 சதவீதத்துக்கும் அதிகமான கச்சா எண்ணெய் வருகிறது. இதில் 20 ஹார்முஸ் வழியாக வருகின்றன. இந்த பாதை மூடப்பட்டது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக இந்தியா கடந்த வாரம் ரஷ்யா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் இருந்து இறக்குமதியை அதிகரித்துள்ளது








