கியாஸ் நிரப்பும் இடத்தில் திடீரென பற்றி எரிந்த கார்..!

கோவை கவுண்டம்பாளையம், தோமையன் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 52 )கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரில் நேற்று தென்திருப்பதிக்கு சென்றார் . அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழியில் வீரபாண்டி பிரிவு அருகே வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் இடத்துக்கு சென்றார். அங்கு காருக்கு கியாஸ் நிரப்பிவிட்டு ஸ்டார்ட் செய்தார் . அப்போது திடீரென்று காரில் தீ பிடித்து எரிந்தது. உடனே அவர் காரில் இருந்து கீழே இறங்கினார் .இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது . இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.