அரசு டவுன் பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்த போதை ஆசாமி கைது.

கோவை ஜூன் 26 கோவை மருதமலை ரோட்டில் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் பிரகாஷ் ( வயது 36 )கட்டிட தொழிலாளி .நேற்று மாலை இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து மருதமலைக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறி உள்ளார். அப்போது மது போதையில் இருந்த அவர் பஸ்சின் உள்ளே செல்லாமல் தொடர்ந்து படிக்கட்டில் நின்றபடியே பயணம் செய்து வந்துள்ளார். இதை பார்த்த கண்டக்டர் வீரமணி பலமுறை உள்ளே வரச்சொல்லி உள்ளார். ஆனால் பிரகாஷ் அதைகாதில் வாங்கிக் கொள்ளாமல் படிக்கட்டில் நின்று தொடர்ந்து பயணம் செய்துள்ளார். மேலும் அவர் கண்டக்டரிடம் தகாத வார்த்தைகள் பேசி உள்ளார். இது பஸ் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஆர். எஸ் .புரம் போலீசில் பிரகாஷ் மீது புகார் செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர் .இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.