நெய்வேலி அனல் மின் நிலையத்தில் நேற்று டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பரவியது.
இதில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ம் அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் நேற்று அதிகாலை டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களில் சென்று தீயை அணைத்தனர்.
விபத்தின்போது என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் யாரும் அங்கு பணியில் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதிக வெப்பம் காரணமாக டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் காப்பர் வயர் உட்பட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பைப் லைன் உடைந்து கால்வாய்
வழியாக டீசல் வெளியேறுவதை தடுக்க உலர் சாம்பல் கொட்டப்பட்டது. மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் 840 மெகாவாட், 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், முதல் பிரிவில் 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட முதல் அலகில் டீசல் பைப் லைன் நேற்று காலை திடீரென உடைந்து, கால்வாய் வழியாக டீசல் வெளியேறியது. தகவலறிந்த அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு வந்தனர்.
கால்வாய் வழியாக டீசல் வெளியேறி, காவிரி ஆற்றில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொக்லைன் வாகனத்தைக் கொண்டு உலர் சாம்பலை கால்வாய் பகுதியில் நிரப்பி, டீசல் வெளியேறாமல் தடுத்தனர். மேலும், பைப் லைன் பகுதியில் தீ விபத்து நேரிடாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தொடர்ந்து, உடைந்த பகுதியை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
உரிய நேரத்தில் விபத்தைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதிக்கு ஊழியர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அனல் மின் நிலைய முதல் பிரிவின் முதல் அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பைப் லைன் சரி செய்த பிறகு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.