71 மாவட்டத் தலைவர்கள் திடீர் டெல்லி பயணம்.!!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 புதிய மாவட்டத் தலைவர்களை ராகுல் காந்தி திடீரென டெல்லிக்கு அழைத்திருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 மாவட்டங்களுக்கான புதிய தலைவர்களைக் கடந்த வாரம் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதில் முதல் முறையாக 4 பெண் மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டது பாராட்டுக்களைப் பெற்றாலும், கட்சியின் உட்பூசல் மீண்டும் வெடித்துள்ளது. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்களுக்கும், கே.எஸ். அழகிரி உள்ளிட்ட முன்னாள் தலைவர்களின் ஆதரவாளர்களுக்கும் பல இடங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக சர்ச்சை புகைந்து வருகிறது.இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனத்தில் மேலிடப் பார்வையாளர்கள் மீது ‘பணப்பேர’ புகார்கள் எழுந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த தேசிய தலைமை, அந்த மாவட்டத்தில் மட்டும் 3 தலைவர்களின் நியமனத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இது குறித்த விரிவான அறிக்கை ஒன்றையும் ராகுல் காந்தி கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவரான பிரவீண் சக்கரவர்த்தி சமீபத்தில் பேசிய கருத்துக்கள் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தின. காங்கிரஸ் நிர்வாகிகள் எந்தக் கட்சிக்கும் அடிபணியாமல், தனித்துவத்தோடு செயல்பட வேண்டும்” என அவர் அறிவுறுத்தியது, காங்கிரஸின் ‘அதிகாரப் பகிர்வு’ கோரிக்கையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. இப்படியான ஒரு சிக்கலான சூழலில்தான், இன்று மதியம் டெல்லி இந்திரா பவனில் ராகுல் காந்தி இந்தப் புதிய தலைவர்களைச் சந்திக்கிறார். இக்கூட்டத்தில் 2026 தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடரலாமா அல்லது மாற்று வியூகங்கள் உள்ளனவா? கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்துத் தொண்டர்களின் மனநிலை என்ன? தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் காங்கிரஸின் தற்போதைய பலம் என்ன? போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி நேரடியாக விவாதிக்க இருக்கிறார். ராகுல் காந்தியின் இந்த நேரடித் தலையீடு, தமிழக காங்கிரஸ் கட்சியைத் தேர்தல் களத்திற்குத் தயார் செய்யும் ஒரு முக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது.