கோவை ஜூன் 20 கோவை ஆர். எஸ். புரத்தில் அரசு மாதிரி பள்ளிக்கூடம் உள்ளது .கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உண்டு – உறைவிட வசதியுடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு “ஸ்மார்ட் ” வகுப்பறை, தங்கும் விடுதி ,300 மாணவர்கள் படிப்பதற்கான வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன .இங்கு மாநகராட்சி அரசு பள்ளி மாணவ – மாணவிகளின் தனி திறமைகளை மேம்படுத்த பயிற்சிகள் ,நீட் தேர்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 250 மாணவ -மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள் .இந்த பள்ளியில் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் மதிய உணவில் கோழி குழம்பு வழங்கப்பட்டது. அன்று மாலை விடுதியில் இருந்த 10, 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 பேருக்கு திடீரென்று வாந்தி – மயக்கம் ஏற்பட்டது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் விடுதி நிர்வாகிகளிடம் கூறினர் .உடனே விடுதி நிர்வாகிகள் விரைந்து வந்து வாந்தி – மயக்கம் அடைந்த 5 மாணவர்களையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இரவில் அவர்கள் விடுதிக்கு திரும்பினார்கள். இது பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று விடுதியில் செயல்பட்டு வரும் சமையல் கூடத்தை ஆய்வு செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு மாதிரி பள்ளி விடுதியில் கோழி குழம்பு சாப்பிட்ட 5 மாணவர்கள் வாந்தி – மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிக்கூடத்தில் கோழி குழம்பு சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு வாந்தி – மயக்கம்.
