கோவை அருகே ரூ 60 லட்சம் ஹவாலாபணம் கடத்திய 2 நபர்கள் கைது

கோவை ஜூன் 19 கோவை அருகே உள்ள வாளையார் சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கேரள கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்  துறை அதிகாரிகள் மற்றும் கேரள போலீசார் நேற்று வாளையாறு சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது கோவையிலிருந்து கேரளா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த 2பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர் .இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. ஆடையிலும் பணத்தை கட்டு கட்டாக மறைத்துவைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தது கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரதிஷ் ( வயது 40) அவருடன் வந்தவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுனில் சிவாஜி (வயது 38) என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.60 லட்சம் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டது இந்த பணத்திற்கு அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை என தெரிய வந்தது.இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.