சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே-8ம் தேதி) வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநில கல்வித் திட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குத் இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்த தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21ஆயிரத்து 57 பேர் எழுதினர். இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணியானது மாநிலம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு அதனை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் பணியானது முடிவடைந்து விட்டதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், முடிகூட்டியே வெளியாவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை மறுநாள் (மே-8ம் தேதி) வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். இந்த பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் எண்ணமாக இருக்கிறது.