ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று ராணுவத்தினரின் கவச வாகனம் ஒன்று சாலையிலிருந்து விலகி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், 7 பேர் காயமடைந்தனர்.
மொத்தம் 17 ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற அந்த ராணுவ வாகனம், உயரமான இடத்தில் உள்ள ஒரு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அதன் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், பதேர்வா-சம்பா சாலைக்கு அருகில் உள்ள கன்னி டாப் என்ற இடத்தில் 200 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்து நடந்த உடனேயே, காயமடைந்த வீரர்களை மீட்க ராணுவம், காவல்துறை மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து மீட்புப் பணியைத் தொடங்கினர்.
முன்னதாக, சம்பவ இடத்திலிருந்து நான்கு வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மற்ற 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன…
நிலைமையை ஆய்வு செய்வதற்காக மூத்த சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் முழுவதும் குடியரசு தின விழாக்கள் அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு முகமைகள் மற்றும் நிர்வாகத்தால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.








