மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கோலாகலமாக தொடங்கியது..!

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழா தொடங்கியது.பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு .சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருக பக்தர்களால் முருகனின் ஏழாவது படைவீடாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு விநாயகர் பூஜை ,வாஸ்து, சாந்தி பூஜை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கோவில் முன்புறம் உள்ள கொடிமரத்தில் பூஜை செய்யப்பட்ட சேவல் மயில் வேல் சின்னம் பொறிக்கப்பட்ட கிருத்திகை கொடி ஏற்றப்பட்டது .தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி உலா வந்தார். விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெறும் .வருகிற 17-ஆம் தேதி சுப்ரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளுகிறார் .

இதையடுத்து சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார் .தொடர்ந்து 18ஆம் தேதி அதிகாரிகள் திருக்கல்யாண மண்டபத்தில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை , திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 8 மணிக்கு மேல் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நடைபெறும். இதில் அலங்கரிக்கப்பட்டு சிறிய தேரில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி , தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.கோவில் சிவாச்சாரியர்கள் மற்றும் ஆதிவாசிகள் தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். பின்னர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை சமே தராக கோவிலை சுற்றி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 19ஆம் தேதி சுப்ரமணியசுவாமிக்குசிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் தொடர்ந்து குதிரை வாகனத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். 20ஆம் தேதி மகா தரிசனம் மற்றும் மாலை 4 மணிக்கு கொடி இறக்கம் நடக்கிறது. 21ஆம் தேதி வசந்த உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். கொரோனா பரவலால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக தைப்பூசத் திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளபக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.